நீ விழல் என
தெரிந்தும் இறைத்துக்
கொண்டிருக்கிறேன்
என் கண்ணீரை
நான் ஒற்றையடிப்பாதை
நீ நாற்சக்கர வண்டி
உன் நினைவுகள்
எனை விட்டு ஓடாமல்
இருக்கவே இக்
கண்ணீர்க் கயிறுகள்
இதோ
என் கண்ணீர்
உன் பாவங்களைக்
கழுவிக்கொள்
நீ புன்னகையால்
தொடங்கிய விளையாட்டை
நான் கண்ணீரால்
முடிக்கின்றேன்
அவன் பார்வையில் நான்
செதுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறேன்
உளியே இல்லாமல் சிலை செய்யும் கலை
அவன் விழி மட்டுமே அறியும்
நீ தந்தி அறுந்த வீணை
நான் யாசிப்பது இராகங்களை
நீ பனக்காட்டு நரி
சலசலப்பு என்ன
என் கதறல் கூட
எடுபடாது உன்னிடம்
என் வார்த்தைகளும்
உன் மௌனங்களும்
புணர்ந்ததில் பிறந்ததே
இந்தக் கண்ணீர்
நாதமே இல்லாமல்
வீணை அதிர்கிறது
அவள் கண்ணசைவில்
நீ படைக்கப்பட்டாய்
நான் புதைக்கப்பட்டேன்
உனது வீணையில்
முகாரி மட்டுமே
மீட்டப்படுகிறது
வாசலில் நீ
கோலமிடுகிறாய்
அலங் கோலமாகிறது
என் வாழ்வு
இதோ என் இதயம்
உதைத்து விளையாடு
உடைத்து விளையாடு
தொலைத்து மட்டும் விடாதே
நீயறியாமல் நான்
களவாடிய பொழுதுகள் தான்
இன்றும் நானறியாமல்
என்னைக் களவாடிக் கொண்டிருக்கிறது
பருவம் உன்னில்
பல்லாங்குழி ஆடி
என்னை படுகுழியில்
தள்ளிக்கொண்டிருக்கிறது